இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

Update: 2018-07-14 22:45 GMT
லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த ஜாசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர். முந்தைய ஆட்டத்தை போன்றே சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது முதல் ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க ஜோடியை பிரித்தார். அவரது பந்தில் முட்டிப்போட்டு அடிக்க முயன்ற பேர்ஸ்டோ (38 ரன்) கிளன் போல்டு ஆனார். அவரது இன்னொரு ஓவரில் ஜாசன் ராயும் (40 ரன்) வெளியேற்றப்பட்டார்.

இதன் பின்னர் ஜோ ரூட்டும், கேப்டன் மோர்கனும் இணைந்து ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். ஸ்கோர் 189 ரன்களாக உயர்ந்த போது மோர்கன் (53 ரன், 51 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) குல்தீப் யாதவின் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (5 ரன்), ஜோஸ் பட்லர் (4 ரன்), மொயீன் அலி (13 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதில் இருவரது கேட்ச்சை பிடித்த விக்கெட் கீப்பர் டோனி, ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 300 கேட்ச்கள் செய்த 4-வது விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை பெற்றார்.

நெருக்கடியான சூழலில் 7-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டுடன், டேவிட் வில்லி கைகோர்த்தார். வில்லி, அதிரடி காட்டி ஸ்கோரை மளமளவென எகிற வைத்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் தனது 12-வது சதத்தை பூர்த்தி செய்தார். 113 ரன்கள் (116 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய ஜோ ரூட் கடைசி பந்தில் ரன்-அவுட் ஆனார்.

50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. கடைசி 8 ஓவர்களில் மட்டும் அவர்கள் 82 ரன்களை திரட்டினர். முதல்முறையாக அரைசதம் கண்ட டேவிட் வில்லி 50 ரன்களுடன் (31 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், சாஹல், ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்தின் பந்து வீச்சை நொறுக்க முடியாமல் திண்டாடினர். 50 ஓவர்கள் முழுமையாக ஆடிய இந்திய அணி 236 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 46 ரன்களும் (63 பந்து), கேப்டன் விராட் கோலி 45 ரன்களும் (56 பந்து), டோனி 37 ரன்களும் (59 பந்து), ஷிகர் தவான் 36 ரன்களும் (30 பந்து, 6 பவுண்டரி) எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிளங்கெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இங்கிலாந்து அணி இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்தது. அத்துடன் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது. கடைசி ஒரு நாள் போட்டி 17-ந்தேதி லீட்சில் நடக்கிறது.

மேலும் செய்திகள்