இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமாலுக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை

இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால், பயிற்சியாளர் உட்பட 3 பேருக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. #Chandimal

Update: 2018-07-16 17:30 GMT
துபாய்,

இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் செயின்ட் லூசியாவில் நடந்த 2–வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

இந்த போட்டியின் 2–வது நாளில் இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியது. இதனை கண்டுபிடித்த நடுவர்கள் ஐசிசியிடம் புகார் தெரிவிக்க சன்டிமாலிடம் விசாரணை நடைபெற்றது. முதலில் தான் பந்தை சேதப்படுத்தவில்லை எனக்கூறி வந்த சன்டிமால் பிறகு ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் விசாரணை முடிவில் ஐசிசி நிர்வாகம், சன்டிமால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை செய்தது. 

இந்த விவகாரத்தில் சன்டிமால், பயிற்சியாளர் ஹதுருசிங்கா, அணி மேலாளர் அசன்கா குருசிங்கா ஆகியோர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டது. இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறி 3–வது நாள் ஆட்டத்தில் களம் இறங்க சன்டிமால் மறுத்தார். இதனால் 2 மணி நேரம் ஆட்டம் தொடங்க தாமதம் ஆனது. வீரர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியமும் கூறியது. மேலும் புகாரை எதிர்த்து அவர் அப்பீல் செய்தார்.

இதனிடையே அப்பீல் விசாரணை முடிவில் மூன்று பேருக்கும் இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் சன்டிமால், பயிற்சியாளர் ஹதுருசிங்கா, அணி மேலாளர் அசன்கா குருசிங்கா ஆகியோர் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்