இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தெண்டுல்கர் மகன் விக்கெட் வீழ்த்தினார்

19 வயதுக்கு உட்பட்ட இந்திய (இளையோர்) கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

Update: 2018-07-17 23:00 GMT

கொழும்பு, 

19 வயதுக்கு உட்பட்ட இந்திய (இளையோர்) கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா–இலங்கை இளையோர் அணிகள் இடையிலான முதலாவது 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 70.3 ஓவர்களில் 244 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்திய இளையோர் அணியில் முதல்முறையாக இடம் பிடித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் 11 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் 2 மெய்டன் ஓவரும் அடங்கும். இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கமில் மிஸ்ரா (9 ரன்) விக்கெட்டை அர்ஜூன் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அர்ஜூன் சாய்த்த முதல் விக்கெட் இதுவாகும். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்தது. இன்று 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்திய அர்ஜூனை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி டுவிட்டர் மூலம் வாழ்த்தி இருக்கிறார்.

மேலும் செய்திகள்