டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் காரைக்குடி காளை அணியுடன் இன்று மோதல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

Update: 2018-07-20 22:00 GMT

சென்னை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

டி.என்.பி.எல். கிரிக்கெட்

3–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் 10–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன.

முக்கிய ஆட்டம்

கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியிடமும், 2–வது ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியிடமும் தோல்வி கண்டது. இன்றைய ஆட்டம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணி முதலாவது லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் கோவை கிங்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. 2–வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. இந்த வெற்றி உத்வேகத்தை தொடர காரைக்குடி காளை அணி தீவிரம் காட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

பயிற்சியாளர் நம்பிக்கை

இந்த ஆட்டம் குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி சென்னையில் நேற்று அளித்த பேட்டியில், ‘முந்தைய இரண்டு ஆட்டங்களும் வித்தியாசமானவையாகும். சென்னையில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. நெல்லை ஆடுகளம் மெதுவாக இருந்தது. எங்களது முழு திறமைக்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நாங்கள் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். வரும் ஆட்டங்களில் வெற்றியை எதிர்நோக்குகிறோம். நாங்கள் திறமையை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். அடுத்த ஆட்டத்தில் (இன்றைய ஆட்டம்) விஜய் சங்கர் விளையாட வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் இங்கிலாந்து தொடரில் இருந்து இன்னும் நாடு திரும்பவில்லை. தரமான சுழற்பந்து வீச்சாளரான எம்.அஸ்வின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்பது எனது எண்ணமாகும். பவர்பிளேயில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதேநேரத்தில் மற்ற அணிகள் பவர்பிளேயில் குறைந்தபட்சம் 45 முதல் 50 ரன்கள் எடுத்தனர். அந்த பகுதியில் கவனம் செலுத்தி அதிக ரன்களை எடுக்க முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார்.

அணி வீரர்கள்

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: கோபிநாத் (கேப்டன்), கங்கா ஸ்ரீதர் ராஜூ, கார்த்திக், சசிதேவ், ராகுல், எம்.அஸ்வின், சன்னிகுமார் சிங், சிவகுமார், விஷால், சித்தார்த், அலெக்சாண்டர்.

காரைக்குடி காளை: ஆதித்யா, அனிருதா (கேப்டன்), பாப்னா, சீனிவாசன், கவின், யோமகேஷ், ஷாஜகான், மோகன் பிரசாத், லட்சுமண், சுவாமிநாதன், ராஜ்குமார்.

மேலும் செய்திகள்