கோவையை வீழ்த்தி தூத்துக்குடி 2-வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

Update: 2018-07-20 21:45 GMT

நத்தம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நத்தத்தில் அரங்கேறிய 9-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, கோவை கிங்சை எதிர்கொண்டது.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த கோவை கேப்டன் அபினவ் முகுந்த் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய தூத்துக்குடி அணிக்கு கேப்டன் கவுசிக் காந்தியும், தினேசும் அதிரடியான தொடக்கம் தந்தனர். அவ்வப்போது சிக்சர், பவுண்டரிகளை விரட்டியடித்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் (8.4 ஓவர்) சேர்த்தனர். இரண்டு முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த கவுசிக் காந்தி 43 ரன்களில் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஆனந்த் டக்-அவுட் ஆனார்.

தினேஷ் 59 ரன்

இதன் பிறகு தினேசுடன், சீனிவாசன் ஜோடி சேர்ந்து ஸ்கோரை மேலும் உயர்த்தினார். ஷாருக்கானின் ஒரே ஓவரில் சீனிவாசன் இரண்டு பவுண்டரி, 2 சிக்சர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

ஒரு கட்டத்தில் 14 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது அந்த அணி 200 ரன்களை கடக்கும் போலவே தோன்றியது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஸ்கோர் கொஞ்சம் தளர்ந்து போனது. தினேஷ் 59 ரன்களிலும் (42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), சீனிவாசன் 45 ரன்களிலும் (21 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். கடைசி கட்டத்தில் சதீஷ் (18 ரன், ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆறுதல் அளித்தார். 20 ஓவர் முடிவில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

தூத்துக்குடி வெற்றி

பின்னர் களம் இறங்கிய கோவை அணிக்கு ஷாருக்கானும் (23 ரன்), கேப்டன் அபினவ் முகுந்தும் (21 ரன்) நல்ல தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் அணியை தூக்கி நிறுத்த தவறினர். பின்வரிசையில் அகில் ஸ்ரீநாத் (35 ரன், 20 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்), விக்கெட் கீப்பர் ரோகித் (25 ரன், 3 சிக்சர்) ஆகியோர் சிறிது நேரம் வாணவேடிக்கை காட்டினர். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதிஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தூத்துக்குடி அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.

கோவை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் தூத்துக்குடி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. தூத்துக்குடி தரப்பில் அதிசயராஜ் டேவிட்சன், ஆகாஷ் சும்ரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்