பயிற்சி கிரிக்கெட்: இந்திய அணி 395 ரன்கள் குவிப்பு

பயிற்சி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 395 ரன்கள் குவித்தது.

Update: 2018-07-26 22:30 GMT
செம்ஸ்போர்டு,

இந்தியா - எஸ்செக்ஸ் அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இது அங்கீகாரமற்ற ஆட்டம் என்பதால் இந்திய அணியில் 18 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்திருந்தது. முரளிவிஜய் (53 ரன்), கேப்டன் விராட் கோலி (68 ரன்), லோகேஷ் ராகுல் (58 ரன்) அரைசதம் அடித்தனர். தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் (82 ரன்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கருண் நாயர் 4 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 51 ரன்களும் (82 பந்து, 8 பவுண்டரி), ரவீந்திர ஜடேஜா 15 ரன்னும் எடுத்து வெளியேறினர். முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 100.2 ஓவர்களில் 395 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. ரிஷாப் பான்ட் 34 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய எஸ்செக்ஸ் அணி ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்