டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- காஞ்சி வீரன்ஸ் இன்று மோதல்

3-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காஞ்சி வீரன்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

Update: 2018-07-31 00:00 GMT
நத்தம், 

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நத்தம் (திண்டுக்கல்), நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா ஒருமுறை மற்ற அணியுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது. தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்த காஞ்சி வீரன்ஸ் அணி தனது 5-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. பாபா அபராஜித் தலைமையிலான காஞ்சி வீரன்ஸ் அணி கடந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றி உத்வேகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் காணும். அதேநேரத்தில் வெற்றி கணக்கை தொடங்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முனைப்பு காட்டும். இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்