இந்தியா- இங்கிலாந்து முதல் டெஸ்ட் முதல் நாள் சுவராஸ்யமான சம்பவங்கள்

இந்தியா- இங்கிலாந்து முதல் டெஸ்ட் முதல் நாள் சுவராஸ்யமான சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.

Update: 2018-08-02 10:45 GMT
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 80 ரன்களும், பேர்ஸ்டோவ் 70 ரன்களும் எடுத்தனர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரூட் 63 வது ஓவரில் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடினார். அப்போது ஸ்டம்பில் பந்தை துல்லியமாக வீசி ரன் அவுட் ஆக்கினார் விராட் கோலி.

இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது, சதமடித்த ஜோ ரூட், பேட்டை கீழே போட்டுவிட்டு ஊதிட்டோம்ல என்பது போல கிண்டலாகச் செய்கை செய்தார். அதற்கு நேற்று பதிலடி கொடுத்தார் விராத். ரூட், ரன் அவுட் ஆகி வெளியே போகும்போது, கோலியும் அவரை போலவே பேட்டை மேலிருந்து கீழே போடுவது போல செய்கை காட்டினார். பின்னர் உதட்டின் மீது கை வைத்து மூச்!; என்று காட்டினார்.

ஒரு நாள் போட்டியில் ஜோ ரூட் செய்த கிண்டலுக்கு நேற்று பதில் கிண்டல் செய்து பழி தீர்த்துக் கொண்டார் கோலி. இதை இங்கிலாந்து பத்திரிகைகள் சுவாரஸ்ய செய்தியாக வெளியிட்டுள்ளன.

அஷ்வின் மற்றும் ஷமியின் அசத்தலான பந்துவீச்சில் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டத்திலேயே சுருண்டது. நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் குரானின் கேட்ச்சை தினேஷ் கார்த்திக் பிடித்திருந்தால், முதல் நாளே இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்திருக்கும். ஆனால் அந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால், இங்கிலாந்து அணி இன்றும் முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முதல் நாளில் அஷ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் வீசிய பந்தை பென் ஸ்டோக்ஸ் அடிக்க அது, எதிர்முனையில் நின்றுகொண்டிருந்த மற்றொரு பேட்ஸ்மேனான குரானுக்கு நேராக சென்றது. அதை கேட்ச் பிடிக்க அஷ்வின் முயன்றபோது, குரான் விலகியதை அடுத்து எளிதாக கேட்ச் பிடித்து ஸ்டோக்ஸை அவுட்டாக்கினார் அஷ்வின்.

அந்த நேரத்தில் குரான் விலகியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் நின்ற இடத்திலேயே நின்றிருந்தால், அஷ்வின் கேட்ச் பிடிக்க சிரமமாக இருந்திருக்கும். குரான் விலகியிருக்க வேண்டியதில்லை என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மார்கஸ் நார்த், டீன் ஜோன்ஸ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் விதிகளின் படி, ஃபீல்டரை வேண்டுமென்றே பேட்ஸ்மேன் தொந்தரவு செய்தால், அதுதான் தவறே தவிர, பேட்ஸ்மேன் நின்ற இடத்தில் இருந்து, பீல்டருக்கு உதவும் வகையில் நகர தேவையில்லை என்பதை சுட்டிக்காட்டியும் குரானின் செயல்பாடு விமர்சிக்கப்படுகிறது.

அஸ்வின் பந்து வீசும்போது தினேஷ் கார்த்திக் அஸ்வினின் பந்து வீச்சை ஊக்குவிக்கும் வகையில் தமிழில் பேசி உற்சாகப்படுத்தினார். இதை சிரித்துக் கொண்டே அஸ்வின் ரசித்தார். தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் தினேஷ் கார்த்திக் அஸ்வினிடம், "டேய்..டேய்..டேய்.. வேற மாதிரி டா நீ... போடுறா மாமா..  நல்லாருக்கு அஷ்வின்.. போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூணு பாலையும்.. அப்படியே போடு.. என்ன பண்ணுறான்னு பாக்கலாம் அஷ்வின்..

ரொம்ப கிட்ட வேண்டாம்,  ஒரு ரன் போன பரவாயில்ல...கால்ல பட்டா காலி.. பொறுமையா பால் போடு... சீன் பால் ரா, ஆஷ்லி’’ என்று கூறுகிறார்.

மேலும் செய்திகள்