வெற்றியுடன் முடிக்கும் முனைப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் அணியுடன் இன்று மோதல்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.

Update: 2018-08-02 21:30 GMT

நத்தம்,

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் திண்டுக்கல் நத்தத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடக்கும் 25–வது லீக் ஆட்டத்தில் கோபிநாத் தலைமையிலான நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர்கொள்கிறது.

முதல் 5 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, காஞ்சி வீரன்சுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்றது. முந்தைய ஆட்டத்தில் தான் கில்லீஸ் அணியின் பேட்டிங், பந்து வீச்சு ஒருசேர ‘கிளிக்’ ஆனது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டாலும், தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்புடன் கில்லீஸ் அணி விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.

4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்றுள்ள திண்டுக்கல் அணிக்கும் இது தான் கடைசி லீக்காகும். இதில் திண்டுக்கல் வாகை சூடினால், ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். தோல்வியை தழுவினால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

கடந்த இரு சீசனில் இவ்விரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டங்களிலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியே வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது. இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்