3வது டெஸ்ட் நாளை தொடக்கம்: ‘மனஉறுதியுடன் போராடுங்கள்’ - இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள்

மனஉறுதியுடன் போராடுங்கள் என இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-08-16 23:15 GMT
நாட்டிங்காம்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. முதல் இரு டெஸ்டில் தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணி அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர். பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த தொடர் தொடங்கியதில் இருந்தே சீதோஷ்ண நிலை மிகவும் கடினமாகவே இருக்கிறது. அதற்கு ஏற்ப தயாராகி பேட்ஸ்மேன்கள் மன உறுதியுடன் போராட்ட குணத்தையும், நேர்த்தியான ஆட்டத்தையும் வெளிப்படுத்த வேண்டும். ரஹானே மட்டுமே இந்த தொடரில் திணறுவதாக சொல்வது நியாயமாக இருக்காது. இரண்டு அணி வீரர்களுமே தடுமாறினர். ரஹானே இந்திய அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவர். முதுகுவலியால் அவதிப்பட்ட கேப்டன் விராட் கோலி முன்பை விட தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறார். பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்’ என்றார்.

2-வது டெஸ்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளருடன் ஆடியது தவறு. சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்த்து இருக்க வேண்டும் என்றும் சாஸ்திரி குறிப்பிட்டார்.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவோர் பெய்லிஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘அடி-தடி வழக்கில் இருந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டதும் உடனடியாக அழைக்கப்பட்டு அணியுடன் இணைந்துள்ளார். சர்ச்சையில் இருந்து அவர் விடுபட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 3-வது டெஸ்டில் அவர் கட்டாயம் இடம் பெறுவார் என்பதில் எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர் எப்படி இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டியது அவசியம்’ என்றார்.

மேலும் செய்திகள்