ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டி: இந்திய ‘பி’, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகள் மோதல்

ஒருநாள் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்திய ‘பி’, ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிகள் மோத உள்ளது.

Update: 2018-08-28 06:03 GMT
பெங்களூரு,

இந்தியா ஏ மற்றும் பி, தென் ஆப்பிரிக்கா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற 9-வது ஆட்டத்தில் இந்திய ஏ அணியும் தென்னாப்பிரிக்கா ஏ அணியும் மோதின. டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்க ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய இந்திய ஏ அணி, 37.3 ஓவர்களில் 157 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக தீபக் சாஹர் 38 ரன்னும், சஞ்சு சாம்சன் 36 ரன்னும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க ஏ அணி சார்பில் பேட்டர்சன் 5 விக்கெட்டுகளையும் மகளா, பிரைலின்க் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி, 37.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்ததின் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணியின் சார்பில், அதிகபட்சமாக பீட்டர் மலன் 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 3 விக்கெட்டையும், குணால் பாண்ட்யா 2 விக்கெட்டையும் மயங்க் மார்கண்டே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற 10-வது ஆட்டத்தில் இந்திய பி அணியும், ஆஸ்திரேலிய ஏ அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய இந்திய பி அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் மணீஷ் பாண்டே அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 117 (109) ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மேலும் இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 36 ரன்னும், இஷான் கிஷான் 31 ரன்னும், தீபக் ஹூடா 30 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய ஏ அணியின் சார்பில் அதிகபட்சமாக மைக்கேல் நேசர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய ஏ அணி களமிறங்கியது. இதில் 24.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழைக்குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி இலக்கு 40 ஓவரில் 247 ரன்கள் என மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் ஆஸ்திரேலிய ஏ அணி 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் வைடர்முத் சிக்ஸ் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். ஆஸ்திரேலிய ஏ அணியின் சார்பில் அதிகபட்சமாக, தொடக்க ஆட்டக்காரர் கவாஜா அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 101(93) ரன்களும், ஜேக் வைடர்முத் 62(42) ரன்களும் சேர்த்தனர். இந்திய பி அணியின் சார்பில் ஜலாஜ் சக்சேனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் லீக் சுற்று முடிவில் தலா 12 புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ள இந்திய பி அணியும், ஆஸ்திரேலிய ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

தலா 9 புள்ளிகளை பெற்றுள்ள இந்திய ஏ அணியும், தென்னாப்பிரிக்க ஏ அணியும் 3 வது இடத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.

மேலும் செய்திகள்