இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-சீன தைபே மோதல்

இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-சீன தைபே அணிகள் மோத உள்ளன. #IntercontinentalCupFootball

Update: 2018-05-23 03:15 GMT
மும்பை,

மும்பையில் நடக்கவுள்ள இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா மற்றும் சீன தைபே அணிகள் மோதுகின்றன.

வரும் 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள ஆசிய கால்பந்து போட்டிக்கு இந்திய அணியை தயார்படுத்தும் வகையில் மும்பையில் இன்டர்காண்டினென்டல் கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்குகிறது. இந்தியா, சீன தைபே, கென்யா, நியூசிலாந்து உள்ளிட்ட 4 அணிகள் கலந்து கொள்கின்றன.

இது குறித்து தலைமை பயிற்சியாளர் காண்ஸ்டான்டைன் கூறுகையில், ‘இந்தப் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலம் வீரர்கள் சிறந்த அனுபவத்தை பெறுவார்கள். கடந்த நான்கு மாதங்களில் சீன தைபே அணி சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் கென்ய வீரர்கள் திறமையானவர்களாகவும் உடல் ரீதியாக வலுவானவர்களாக இருப்பார்கள். கென்யா, நியூசிலாந்து அணிகளில் உள்ள பல வீரர்கள் பல்வேறு வெளிநாட்டு கிளப் அணிகளில் விளையாடி வருகிறார்கள். இருப்பினும் ஆப்பிரிக்காவில் எந்தவொரு அணியும் எங்களுக்கு சவாலாக இருக்கும்’ என்று கூறினார்.

இதில் 1-ம் தேதி நடக்க உள்ள துவக்க ஆட்டத்தில் இந்தியா-சீன தைபே அணிகள் மோதுகின்றன. மேலும் 2-ம் தேதி கென்யா-நியூசிலாந்து, 4-ம் தேதி-இந்தியா-கென்யா, 5-ம் தேதி-சீன தைபே-நியூசிலாந்து, 7-ம் தேதி இந்தியா-நியூசிலாந்து, 8-ம் தேதி சீன தைபே-கென்யா, 10-ம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்