உலக கோப்பை கால்பந்து: சுயகோலால் ஈரானிடம் வீழ்ந்தது மொராக்கோ

உலக கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ அணி சுயகோலால் ஈரானிடம் கடைசி நிமிடத்தில் மண்ணை கவ்வியது.

Update: 2018-06-15 23:15 GMT
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் மொராக்கோ- ஈரான் (பி பிரிவு) அணிகள் சந்தித்தன.

20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்குள் நுழைந்துள்ள மொராக்கோ அணியே இந்த ஆட்டத்தில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் சரி (64 சதவீதம்), ஷாட் அடிப்பதிலும் சரி (13 ஷாட்) ஈரானை விட மொராக்கோவின் கை ஓங்கி நின்றது. கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு கோட்டை விடுவதுமாக ஆட்டத்தின் போக்கு அமைந்தது. மொராக்கோ முன்னணி வீரர் ஹகிம் ஜியேச் அடித்த சூப்பரான ஒரு ஷாட்டை ஈரான் கோல் கீப்பர் அலிரெஜா பிரன்வன்ட் பாய்ந்து விழுந்து தடுத்து தன்னை கடந்து செல்லாமல் பார்த்துக் கொண்டார்.

ஆட்டம் ‘டிரா’வை நோக்கி நகர்ந்த நிலையில், வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் தான் ஆப்பிரிக்க தேசமான மொராக்கோ தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டது.

அந்த சமயத்தில் கிடைத்த ‘பிரிகிக்’ வாய்ப்பில் இடது கார்னருக்கு பக்கத்தில் இருந்து ஈரான் வீரர் ஹாஜிசபி கோல் நோக்கி உதைத்தார். அதை வலைக்கு வெளியே தள்ளிவிடும் நினைப்புடன் மொராக்கோ அணியின் மாற்று ஆட்டக்காரர் அஜிஸ் போவ்ஹட்டோஸ் தலையால் அதிவேகமாக முட்டினார். ஆனால் துரதிர்ஷ்டம் பந்து நேராக வலைக்குள் செல்ல, அது சுயகோலாக மாறியது.

இதனால் ஒரு கனம் மொராக்கோ வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 31 வயதான போவ்ஹட்டோஸ் கண்ணீர் விட்டு அழுதார்.

முடிவில் ஆசிய அணியான ஈரான் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தியது. உலக கோப்பை போட்டியில் ஈரானின் 2-வது வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு உலக கோப்பையில் அமெரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இருந்தது.

மேலும் செய்திகள்