உருகுவேயின் சவாலை முறியடிக்குமா போர்ச்சுகல்?

இன்று நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் உருகுவே அணி, போர்ச்சுகலை எதிர்கொள்கிறது.

Update: 2018-06-29 23:15 GMT
உலக கோப்பை கால்பந்து தொடரில் 2-வது சுற்றில் இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு அரங்கேறும் மற்றொரு ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான உருகுவே அணி, ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகலை எதிர்த்து சோச்சி நகரில் மல்லுகட்டுகிறது.

நடப்பு தொடரில் லீக் சுற்றில் (ஏ பிரிவு) மூன்று ஆட்டங்களிலும் (எகிப்து, சவுதிஅரேபியா, ரஷியாவுக்கு எதிராக) வெற்றியை ருசித்து ஒரு கோல் கூட விட்டுக்கொடுக்காத ஒரே அணி உருகுவே தான். லூயிஸ் சுவாரசும், எடின்சன் கவானியும் அந்த அணியின் இரட்டை தூண்களாக விளங்குகிறார்கள். இந்த வெற்றிப்பயணத்தை நாக்-அவுட் சுற்றிலும் தொடரும் முனைப்புடன் உருகுவே வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

கிறிஸ்டியானா ரொனால் டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி லீக் சுற்றில் ஸ்பெயின், ஈரானுடன் டிரா கண்டு, மொராக்கோவை தோற்கடித்து ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்றது. உலக கோப்பையில் அரைஇறுதியை தாண்டாத போர்ச்சுகல் அணி வரலாறு படைக்க வேண்டும் என்றால் ரொனால்டோ, எரிமலை போல் களத்தில் சீற வேண்டியது முக்கியமாகும். அவரைத் தான் அந்த அணி முழுமையாக நம்பி இருக்கிறது. ரொனால்டோ இதுவரை 4 கோல்கள் அடித்திருப்பது கவனிக்கத்தக்கது.

இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது. இன்னொரு ஆட்டம் டிரா ஆனது. ஆனால் உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் யுத்தம் நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்