போர்ச்சுகல் அணியை வெளியேற்றி கால்இறுதிக்குள் நுழைந்தது உருகுவே

உலக கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறியது.

Update: 2018-07-01 23:00 GMT
சோச்சி,

உலக கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு சோச்சி நகரில் அரங்கேறிய 2-வது சுற்று ஆட்டத்தில் (நாக்-அவுட்) இரண்டு முறை சாம்பியனான உருகுவே அணி, ஐரோப்பிய சாம்பியனான கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகலை எதிர்கொண்டது.

முதல் வினாடியில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். 6-வது நிமிடத்தில் ரொனால்டோ இலக்கை நோக்கி அடித்த பந்து தாழ்வாக ஓடி நேராக உருகுவே கோல் கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெராவின் கையில் சிக்கியது. 7-வது நிமிடத்தில் உருகுவே முதல் கோல் போட்டது. சக வீரர் லூயிஸ் சுவாரஸ் தூக்கியடித்த பந்தை உருகுவேயின் எடின்சன் கவானி தலையால் முட்டி சரியாக கோலுக்குள் அனுப்பினார். இதனால் உருகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பதிலடி கொடுக்க போராடிய போர்ச்சுகல் வீரர்களின் முயற்சிக்கு முதல் பாதியில் பலன் இல்லை.

பிற்பாதியில் 55-வது நிமிடத்தில் போர்ச்சுகல் பதில் கோல் திருப்பியது. கார்னரில் இருந்து குயரீரோ அடித்த பந்தை, சக வீரர் பெபே துள்ளிகுதித்து தலையால் முட்டி கோலாக மாற்றினார். 35 வயதான பெபே, உலக கோப்பை போட்டியில் அதிக வயதில் கோல் அடித்த போர்ச்சுகல் வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

ஆனால் போர்ச்சுகல் வீரர்களின் உற்சாகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. 62-வது நிமிடத்தில் கவானி மீண்டும் ஒரு அற்புதமான கோல் போட்டு அசத்தினார். பென்டாகுர் குறுக்கே தட்டிக்கொடுத்த பந்தை கவானி, வலுவாக ஓங்கி உதைத்த போது, அது வளைந்து கோலுக்குள் புகுந்தது. 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில் உருகுவே வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர்.

எப்படியாவது மேலும் ஒரு கோல் திணித்து சமனுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று போர்ச்சுகல் வீரர்கள் களத்தில் ஆவேசம் காட்டினர். 70-வது நிமிடத்தில் போர்ச்சுகல் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது. குயரீரோ அடித்த பந்தை முன்னோக்கி வந்து தடுத்த உருகுவே கோல் கீப்பர் முஸ்லெராவின் கையில் பந்து பிடிபடவில்லை. அவர் தடுமாறி கீழே விழுந்து கிடக்க, அச்சமயம் மற்றொரு போர்ச்சுகல் வீரர் பெர்னர்ட்டோ சில்வா பந்தை கம்பத்திற்கு மேல்வாக்கில் தூக்கியடித்து சொதப்பி விட்டார். இதன் பிறகு ஒரு சில முறை நெருங்கி வந்து கோல் வாய்ப்பு வீண் ஆகின.

பந்து போர்ச்சுகல் அணியினர் வசமே (61 சதவீதம்) அதிகமாக வலம் வந்த போதிலும், உருகுவே வீரர்களின் வலுமிக்க தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. போர்ச்சுகல் அணி, ரொனால்டோவை தான் முழுமையாக நம்பி இருந்தது. அவரை எழுச்சி பெற முடியாத அளவுக்கு உருகுவே வீரர்கள் முடக்கினர்.

வழக்கமான நேரத்திற்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. போர்ச்சுகல் வீரர்கள் தங்களது ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒன்று திரட்டி உச்சக்கட்ட தாக்குதலில் இறங்கினர். எதிரணி செய்த பவுலுக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு கொடுக்காததால் நடுவரிடம் முட்டிமோதிய ரொனால்டோ மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார். ‘இனி இழப்பதற்கு எதுவும் இல்லை’ என்ற சூழலில் போர்ச்சுகல் கோல் கீப்பர் பாட்ரிசியோ தனது வலையை விட்டு எதிர்முகாமுக்குள் தைரியமாக நுழைந்து விளையாடினார். ஒரு முறை பந்தை தலையால் முட்டவும் முயற்சித்தார். கடைசி நிமிடத்தில் போர்ச்சுகல் மாற்று ஆட்டக்காரர் குரேஸ்மா அடித்த நல்ல ஷாட்டை, உருகுவே கோல் கீப்பர் தடுத்து நிறுத்த அத்துடன் ‘நீயா-நானா’ சவால் முடிவுக்கு வந்தது.

பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. உருகுவே அணி கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் பிரான்சை 6-ந்தேதி சந்திக்கிறது.

இதயங்களை வென்ற ரொனால்டோ


இரட்டை கோல் போட்டு உருகுவே அணியின் ஹீரோவாக ஜொலித்த கவானி, காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் வலி தாங்க முடியாமல் 74-வது நிமிடத்தில் வெளியேறினார். நடப்பதற்கே சிரமப்பட்ட அவரை கைதாங்கலாக எதிரணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அழைத்து சென்று மைதானத்தின் எல்லைக்கோட்டு அருகே விட்டார். தங்கள் அணிக்கு ‘வேட்டு’ வைத்த ஒரு வீரருக்கு ரொனால்டோ உதவியது உண்மையான விளையாட்டு உணர்வை பிரதிபலிப்பதாக அமைந்தது. அவரது செயல் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

சாதனை துளிகள்

* இந்த உலக கோப்பையில் உருகுவே அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் (3 லீக் மற்றும் 2-வது சுற்று) வெற்றி பெற்று இருக்கிறது. 1930-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு உலக கோப்பையில் உருகுவே முதல் 4 ஆட்டங்களில் வெற்றியை ருசிப்பது இதுவே முதல் முறையாகும்.

* இரட்டை கோல் அடித்த உருகுவே வீரர் கவானியின் வயது 31 ஆண்டு 108 நாட்கள். இதன்மூலம் உலக கோப்பையில் அதிக வயதில் இரண்டு கோல் அடித்த உருகுவே வீரர் என்ற சிறப்புக்குரியவர் ஆனார்.

* சர்வதேச போட்டிகளில் கவானி இதுவரை 45 கோல்கள் அடித்திருக்கிறார்.

* போர்ச்சுகல் அணி தனது கடைசி 4 உலக கோப்பை போட்டிகளிலும் நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றதில்லை. அந்த சோகம் தொடருகிறது.

ரொனால்டோவின் கனவு சிதைந்தது

கால்பந்து உலகில் கொடிகட்டி பறக்கும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினை சேர்ந்த ரியல்மாட்ரிட் கிளப்புக்காகவும் ஆடி வருகிறார். 4-வது முறையாக உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற ரொனால்டோவுக்கு மீண்டும் ஒரு முறை சோகமே மிஞ்சியிருக்கிறது. லீக் சுற்றில் ‘ஹாட்ரிக்’ உள்பட 4 கோல்கள் அடித்து அமர்க்களப்படுத்திய ரொனால்டோ, நெருக்கடி மிகுந்த நாக்-அவுட் சுற்றில் ஜொலிக்கவில்லை. உருகுவேவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இலக்கை நோக்கி ஒரே ஒரு ஷாட் மட்டுமே அடித்திருந்தார்.

நாக்-அவுட் சுற்று ஆட்டம் என்றாலே அவருக்கு ஏனோ நாக்கு தள்ளி விடுகிறது. இதுவரை உலக கோப்பை போட்டியில் நாக்-அவுட் சுற்றுஆட்டங்களில் அவர் கோல் அடித்ததும் இல்லை, கோலுக்கு உதவிபுரிந்ததும் இல்லை. அதாவது நாக்-அவுட் சுற்றில் மொத்தம் 514 நிமிடங்கள் விளையாடியுள்ள அவர் ஒருமுறை கூட பந்தை வலைக்குள் அனுப்பிய வரலாறு கிடையாது.

தோல்வியையடுத்து அவரது உலக கோப்பை கனவு சிதைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரும் போது அவரது வயது 37 ஆகி விடும். அப்போது அவர் ஆடுவதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு தான். எதிர்காலம் குறித்து ரொனால்டோவிடம் கேள்வி எழுப்பிய போது, ‘எனது எதிர்காலம் குறித்தோ அல்லது பயிற்சியாளர், வீரர்கள் பற்றியோ பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல. ஆனால் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக போர்ச்சுகல் தொடர்ந்து திகழும் என்று நான் உறுதி அளிக்கிறேன். எங்களிடம் உள்ள வீரர்கள் சாதிக்கும் வேட்கையில் உள்ளவர்கள். அவர்கள் நிச்சயம் போர்ச்சுகலை பெருமைப்பட வைப்பார்கள்’ என்றார்.

ரொனால்டோ குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சான்டோஸ் கூறுகையில், ‘2020-ம் ஆண்டு நடக்கும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரொனால்டோ ஆடுவார். கால்பந்து ஆட்டத்துக்கு கொடுக்க அவரிடம் இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்த தொடர் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இதில் ரொனால்டோ, இளம் வீரர்களின் ஆட்டத்திறன் முன்னேற்றம் காண உதவுவார் என்று நம்புகிறேன். நாங்கள் அனைவரும் ரொனால்டோ எங்களுடன் அணியில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ரொனால்டோ போன்ற கேப்டன் இளம் வீரர்களுக்கு தேவை’ என்றார்.

முன்னதாக அர்ஜென்டினா அணி 3-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் மண்ணை கவ்வியது. இதன் மூலம் அர்ஜென்டினா அணியின் சாதனை வீரர் 31 வயதான லயோனல் மெஸ்சியின் கனவும் தகர்ந்தது. ஒரே நாளில் இரு சூப்பர் ஸ்டார்களின் அணிகள் வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

மேலும் செய்திகள்