பிரிக்ஸ் மகளிர் கால்பந்து போட்டி: பிரேசில் அணி வெற்றி

பிரிக்ஸ் மகளிர் கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-5 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்றது. #BRICSFootball

Update: 2018-07-22 02:49 GMT
ஜோகன்னஸ்பர்க்,

தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் ரஷியா, சீனா, பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இதன் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணியை 0-5 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தியது.

பரபரப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் 8வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை  இந்திய அணியினர் வீணடித்தனர். இந்திய அணியின் கோல் கீப்பர் அர்ச்சனா ஆறுமுகம் சிறப்பாக செயல்பட்டு பிரேசிலின் தாக்குதலை கட்டுப்படுத்தினார். இருந்தபோதும் பிரேசில் அணி 40வது நிமிடத்தில் 1 கோல் அடிக்க, முதல் பாதி ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி முன்னிலை பெற்றிருந்தது.

 அதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் பிரேசில் அணியின் ஆதிக்கமே நீடித்தது. இரண்டாவது பாதியில் பிரேசில் அணி அடுத்தடுத்து 4 கோல்களை அடித்தது. இதன்மூலம் பிரேசில் அணி 0-5 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

இன்றைய கடைசி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்