ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதி, இறுதிப்போட்டிக்கான தேதி அறிவிப்பு

நாக்-அவுட், அரைஇறுதி, இறுதிப்போட்டிக்கான தேதியை ஐ.எஸ்.எல். கால்பந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-04-11 22:14 GMT

புதுடெல்லி,

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் லீக் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். எஞ்சிய 4 அணிகள் நாக்-அவுட் சுற்றில் மோதி, அதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரைஇறுதியில் விளையாடும். அரைஇறுதி சுற்றில் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் 2 முறை சந்திக்க வேண்டும்.

இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் மும்பை சிட்டி, மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், எப்.சி. கோவா, ஒடிசா எப்.சி., கேரளா பிளாஸ்டர்ஸ், சென்னையின் எப்.சி. ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே- ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. பெங்களூரு எப்.சி., ஐதராபாத் எப்.சி. உள்பட 6 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளன.

இந்த நிலையில் நாக்-அவுட், அரைஇறுதி, இறுதிப்போட்டிக்கான தேதியை ஐ.எஸ்.எல். கால்பந்து நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதன்படி நாக்-அவுட் சுற்று வருகிற 19, 20-ந் தேதியும், அரைஇறுதி ஆட்டங்கள் 23, 24, 28, 29-ந் தேதியும், இறுதிப்போட்டி அடுத்த மாதம் (மே) 4-ந் தேதியும் நடைபெறுகிறது. போட்டிக்கான இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்