ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணி அறிவிக்கப்பட்டது.

Update: 2018-07-09 22:30 GMT
புதுடெல்லி,

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது.

சமீபத்தில் நெதர்லாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வீரர்கள் பெரும்பாலும் அணியில் அப்படியே இடம் பிடித்துள்ளனர். ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ரூபிந்தர் பால்சிங் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஜர்மன்பிரீத் சிங் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முழங்காலில் காயம் அடைந்த ரமன்தீப்சிங்குக்கு பதிலாக ஆகாஷ்தீப்சிங் சேர்க்கப்பட்டு இருக்கிறார். மற்றபடி மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

அணி தேர்வு குறித்து இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கருத்து தெரிவிக்கையில், ‘சமீபத்தில் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். எதிர்பாராதவிதமாக காயம் அடைந்த ரமன்தீப்சிங் அணியில் இடம் பெறாதது இழப்பாகும். ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் வகையில் நமது அணி கொரியா மற்றும் நியூசிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பது நல்ல விஷயமாகும். ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் நோக்குடன் செயல்படுவோம்’ என்றார். கடந்த (2014) ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வீரர்கள் வருமாறு:-

கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ் (கேப்டன்), கிரிஷன் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார், பிரேந்திர லக்ரா, சுரேந்தர்குமார், ரூபிந்தர் பால்சிங், அமித் ரோஹிதாஸ், நடுகளம்: மன்பிரீத்சிங், சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), சிம்ரன்ஜீத்சிங், சர்தார்சிங், விவேக் சாகர் பிரசாத், முன்களம்: சுனில், மன்தீப்சிங், ஆகாஷ்தீப்சிங், லலித்குமார் உபாத்யாய், தில்பிரீத்சிங்.

மேலும் செய்திகள்