பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

Update: 2018-07-30 01:53 GMT
லண்டன்,

பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியா அணி "பி" பிரிவில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெரும். 2 மற்றும் 3 வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெரும். முன்னதாக, இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் காலிறுதிக்கு தகுதி பெற கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

அமெரிக்கா அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் அமெரிக்கா வீராங்கனை மார்கஸ் பவொலினோ முதல் கோலை அடித்தார். இதனால் அமெரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று விளையாடியது. ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை கோலாக மாற்றினார் இந்திய வீராங்கனை ராணி ராம்பால். இந்த கோல் மூலம் 1-1 என சமநிலை பெற்றது. பின்னர் இரண்டு அணிகளும் கோல் போட எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது. ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் மேற்கொண்டு கோல் போடாததால், ஆட்டம் டிரா ஆனது.

இந்திய அணி வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆட்டம் டிரா ஆனதால், இந்திய அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. பிளே ஆப் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றால் காலிறுதிக்கு தகுதி பெரும்.

மேலும் செய்திகள்