ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி அரைஇறுதியில் இந்திய அணி மலேசியாவிடம் தோல்வி

ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி பெனால்டி ‘ஷூட்–அவுட்’டில் மலேசியாவிடம் வீழ்ந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

Update: 2018-08-30 21:30 GMT

ஜகர்தா, 

ஆசிய விளையாட்டு ஆண்கள் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி பெனால்டி ‘ஷூட்–அவுட்’டில் மலேசியாவிடம் வீழ்ந்து இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

ஆண்கள் ஆக்கி அரைஇறுதி

இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் ஆண்கள் ஆக்கி போட்டியில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது.

லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 76 கோல்கள் அடித்து அசத்திய இந்திய அணியின் தடுப்பு ஆட்டம் இந்த முக்கிய போட்டியில் தவறுகள் அதிகம் நிறைந்ததாக இருந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2 முறை முன்னிலை பெற்றாலும் அதனை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. வழக்கமான நேரம் முடிவில் இரு அணிகளும் 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

பெனால்டி ‘ஷூட்–அவுட்’

முதல் 5 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய அணி வீணடித்தது. 6–வது பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீரர் ஹர்மன்பிரீத் சிங்கும், கடைசி பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய அணி வீரர் வருண்குமாரும் கோல் அடித்தனர். மலேசிய அணி தரப்பில் பைசல் சாரி 39–வது நிமிடத்திலும், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி முகமது ராஸி 58–வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.

வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் சமநிலை பெற்றதால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்–அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அளிக்கப்பட்ட 5 வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. 3 வாய்ப்புகளை கோட்டை விட்டன. இந்திய அணியில் ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் பெனால்டி ‘ஷூட்–அவுட்’ வாய்ப்பை கோலாக்கினார்கள்.

சடன் டெத் முறை

மீண்டும் சமநிலை நீடித்ததால் வெற்றியை நிர்ணயிக்க ‘சடன் டெத்’ முறை அமல்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தொடர்ச்சியாக 4 பெனால்டி வாய்ப்புகளை அடுத்தடுத்து கோலாக மாற்றியதால் பரபரப்பு மேலும் எகிறியது. 5–வது வாய்ப்பை மலேசியா கோலாக்கி முன்னிலை பெற்றது. இதன் பிறகு இந்தியாவுக்குரிய 5–வது வாய்ப்பில் சுனில் பந்தை வெளியில் அடித்ததுடன், இந்திய அணியின் தோல்விக்கும் வித்திட்டார்.

‘ஷூட்–அவுட்’ முடிவில் இந்திய அணி 6–7 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பு இழந்தது. ஆசிய போட்டியில் மகுடம் சூடும் அணிக்கு அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் நல்ல வாய்ப்பு கிட்டும். அந்த வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது. மற்றொரு அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி 0–1 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை நழுவ விட்டது.

தோல்வி குறித்து இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கருத்து தெரிவிக்கையில், ‘மலேசிய அணியினர் வெற்றிக்கு தகுதியானவர்கள். நாங்கள் நிறைய தவறுகளை இழைத்து விட்டோம். அதனால் அதற்குரிய விளைவை சந்தித்துள்ளோம். ஆக்கியில் இந்தியர்களுக்குரிய திறமையை வெளிப்படுத்த முயற்சித்தோம். அதனை செய்ததன் மூலம் உத்வேகத்தை இழந்து விட்டோம். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கான எங்களது தகுதி பாதை கடினமாகி இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான எளிய வாய்ப்பை இழந்து இருக்கிறோம்’ என்றார்.

இன்று பெண்கள் ஆக்கி இறுதிப்போட்டி

நாளை (சனிக்கிழமை) நடைபெறும் ஆண்கள் ஆக்கி தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் மலேசியா–ஜப்பான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, 8 முறை சாம்பியனான பாகிஸ்தானை சந்திக்கிறது.

பெண்கள் ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா–ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 1982–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றதில்லை. அந்த தாகத்தை இந்திய அணி தணிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தென்கொரியா–சீனா அணிகள் சந்திக்கின்றன.

ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி தோல்வி

ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் அணிகள் பிரிவில் ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் 1–2 என்ற கணக்கில் ஹாங்காங்கிடம் தோல்வி கண்டது. இந்திய அணி வீராங்கனைகள் தீபிகா பலிக்கல், ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டனர். மற்றொரு இந்திய வீராங்கனையான சுனன்யா குருவில்லா தனது ஆட்டத்தில் வெற்றியை ருசித்தார்.

மேலும் செய்திகள்