ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் இந்திய ஆக்கி அணியின் கோல்கீப்பர்
ஸ்ரீஜேஷ் இதுவரை இந்திய அணிக்காக 328 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.;
ஸ்ரீஜேஷ் (image courtesy: Hockey India via ANI)
பாரீஸ்,
இந்திய ஆக்கி அணியின் முன்னணி கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் பாரீஸ் ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூக வலைதளம் மூலம் நேற்று அறிவித்தார். இதன் மூலம் அவரது 18 ஆண்டு கால ஆக்கி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. 4-வது முறையாக ஒலிம்பிக்கில் களம் காணும் கேரளாவைச் சேர்ந்த 36 வயதான ஸ்ரீஜேஷ் இதுவரை இந்திய அணிக்காக 328 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
ஸ்ரீஜேஷ் ஆசிய விளையாட்டு போட்டியில் 2 தங்கப்பதக்கமும் (2014, 2023-ம் ஆண்டு), ஒரு வெண்கலப்பதக்கமும் (2018), காமன்வெல்த் விளையாட்டில் 2 வெள்ளிப்பதக்கமும் (2014, 2022), ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் 4 தங்கமும், ஒரு வெள்ளியும், உலக சீரிஸ் இறுதி சுற்றில் தங்கப்பதக்கமும் (2019), சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் 2 வெள்ளிப்பதக்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கமும் வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.