தேசிய ஆடவர் கூடைப்பந்து: இந்தியன் ரயில்வெ அணி வெற்றி

தேசிய ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ரயில்வெ அணி வெற்றி பெற்றது. #NationalBasketball

Update: 2018-05-23 01:58 GMT
கரூர்,

கரூர் கூடைப்பந்து கழகம் சார்பில் எல்.ஆர்.ஜி நாயுடு நினைவு சுழற்கோப்பைக்கான 60-ம் ஆண்டு தேசியளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

தேசிய அளவிலான ஆடவர் கூடைப்பந்து போட்டியின் ஏ பிரிவில் சென்னை கஸ்டம்ஸ், ஹைதராபாத் இன்கம்டாக்ஸ், டெல்லி ஏர்போர்ஸ், புதுடெல்லி இந்தியன் ரயில்வே, பெங்களூர் ஏஎஸ்சி ஆகிய 5 அணிகள், பி பிரிவில் சென்னை ஐசிஎப், டெல்லி இன்கம்டாக்ஸ், பஞ்சாப் போலீஸ், லோனவ்லா இந்தியன் நேவி ஆகிய 4 அணிகள் என மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன.

லீக் முறையில் நடைபெறும் போட்டியின் 2-வது நாளான நேற்று காலை நடைபெற்ற போட்டியில் ஏஎஸ்சி பெங்களூர் அணி மற்றும் இந்தியன் நேவி அணிகள் வெற்றி பெற்றன. தொடர்ந்து மாலையில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் புதுடெல்லி இந்தியன் ரயில்வெ அணியும், ஹைதராபாத் இன்கம்டாக்ஸ் அணியும் மோதின. இதில் புதுடெல்லி இந்தியன் ரயில்வெ அணி 78-71 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றது.

தொடர்ந்து லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வரும் 25-ம் தேதி இறுதிப்போட்டிகள் மற்றும் மூன்று, நான்காமிடத்துக்கான போட்டிகள் நடைபெறும். முதலிடம் பெறும் அணிக்கு பரிசாக ரூ.50,000, இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30,000, மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 25,000, நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20,000 என பரிசு, சுழற்கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.

மேலும் செய்திகள்