பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: இந்தியாவிற்கு வர ஸ்குவாஷ் வீராங்கனை மறுப்பு

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் இந்தியாவிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை ஒருவர்.

Update: 2018-07-20 10:53 GMT

உலக அளவில் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்களின் பட்டியலினை, தாம்சன் ரியூட்டர்ஸ் என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் காங்கோவை அடுத்து 4-வது இடத்தில் இந்தியா  இடம் பெற்றிருந்தது. தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும், உலக அளவில் இந்த ஆய்வு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தியாவிற்கு வருகை தர வெளிநாடு சுற்றுலா பயணிகள் பலரும் தயக்கம் காட்ட ஆரம்பித்து உள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் நடந்துகொண்டிருக்கும் ஜூனியர் ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தும், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூனியர் ஸ்குவாஷ் விளையாட்டின் நம்பர் ஒன் வீராங்கனை ஆம்ப்ரி அலின்க்ஸ் (16) வர மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது பயிற்சியாளர் பாஸ்கல் கூறுகையில், சமீப காலங்களாகவே இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து பத்திரிக்கையின் வாயிலாக படித்த ஆம்ப்ரியின் பெற்றோர், பிள்ளையின் நலனில் கவலை கொண்டு வர அனுமதி மறுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருவண்ணாமலையில் உள்ள விடுதியில் ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 4 மர்ம நபர்களால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்