உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார்.
நான்ஜிங்,
சீனாவின் நான்ஜிங் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியின் மகளிர் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து மற்றும் ஜப்பானின் அகானே யாமகுச்சி ஆகியோர் விளையாடினர்.
இதில் உலக தர வரிசையில் 2வது இடம் வகிக்கும் அகானேவை 21-16, 24-22 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு சிந்து முன்னேறியுள்ளார். இந்த வருடம் நடந்த 2 போட்டிகளில் இருவரும் நேருக்கு நேர் விளையாடி உள்ளனர். அவற்றில் தலா ஒரு போட்டியில் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த போட்டி 54 நிமிடங்கள் நடந்தது. 23 வயது நிறைந்த சிந்து இறுதி போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன் மற்றும் 2 முறை சாம்பியன் போட்டியில் தங்க பதக்கம் வென்றவரான ஸ்பெயின் நாட்டின் கரோலீனா மெரீனை நாளை நடைபெறும் போட்டியில் எதிர்கொள்கிறார்.