வில்வித்தையில் வெள்ளி வென்ற மத்திய பிரதேச வீராங்கனைக்கு ரூ.75 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு
ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தையில் வெள்ளி பதக்கம் வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
போபால்,
இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் நேற்று நடந்த மகளிர் வில்வித்தை இறுதி போட்டியில் இந்திய அணி 228-231 என்ற புள்ளி கணக்கில் கொரியாவிடம் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. கொரிய அணி தங்கம் வென்றது.
இந்திய அணியில் முஸ்கான் கிரார், மதுமிதா குமாரி மற்றும் ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரை சேர்ந்த கிரார் மாநில வில்வித்தை அகாடெமியில் உறுப்பினராக உள்ளார்.
கிரார் தனது சாதனையால் மாநிலத்திற்கும் மற்றும் விளையாட்டு உலகிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என சவுகான் தெரிவித்துள்ளார்..
ஜார்க்கண்ட மாநில முதல் மந்திரி ரகுபர் தாஸ் பதக்கம் வென்ற வீராங்கனை மதுமிதாவுக்கு ₹.10 லட்சம் பரிசு தொகையை நேற்று அறிவித்தார்.