புரோ கபடி வெளியேற்றுதல் சுற்றில் மும்பை-உ.பி. யோத்தா அணிகள் இன்று மோதல்

புரோ கபடியில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மும்பை - உ.பி.யோத்தா அணிகள் மோதுகின்றன.

Update: 2018-12-29 22:45 GMT
கொச்சி,

6-வது புரோ கபடி லீக் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவடைந்து விட்டது. ஒவ்வொரு அணிகளும் 22 லீக் ஆட்டங்களில் விளையாடின. ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், யு மும்பா, தபாங் டெல்லி, ‘பி’ பிரிவில் பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், உ.பி. யோத்தா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப் சுற்று) முன்னேறின. தமிழ் தலைவாஸ் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு நடையை கட்டியது.

பிளே-ஆப் சுற்றில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த அணிகளான குஜராத்-பெங்களூரு புல்ஸ் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணி இன்னொரு வாய்ப்புக்காக காத்திருக்கும்.

எஞ்சிய 4 அணிகள் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் விளையாடும். முதல் இரண்டு வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணிகள் 3-வது வெளியேற்றுதல் சுற்றில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வியை தழுவும் அணியுடன் இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றில் மோதும்.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு அரங்கேறும் முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் முன்னாள் சாம்பியனான யு மும்பா அணி (மும்பை அணி), உ.பி.யோத்தாவை சந்திக்கிறது. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த 2 ஆட்டங்களில் தலா ஒன்றில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது வெளியேற்றுதல் சுற்றில் தபாங் டெல்லி அணி, பெங்கால் வாரியர்சை எதிர்கொள்கிறது. பெங்கால் வாரியர்சுக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களில் ஏற்கனவே வெற்றியை ருசித்த டெல்லி அணி அதே ஆதிக்கத்தை தொடர தீவிர முனைப்பு காட்டும். வெளியேற்றுதல் சுற்றில் தோற்கும் அணிகள் போட்டியை விட்டு வெளியேற்றப்படும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்