உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: மானு பாகெர், ஹீனா தோல்வி

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், மானு பாகெர், ஹீனா ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

Update: 2019-02-26 22:45 GMT
புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் மானு பாகெர், ஹீனா சித்து ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் அளித்தனர். மானு பாகெர் 573 புள்ளிகளுடன் 14-வது இடத்துக்கும், ஹீனா சித்து 571 புள்ளிகளுடன் 25-வது இடத்துக்கும் தள்ளப்பட்டு தகுதி சுற்றுடன் வெளியேறினர்.

8 பேர் கொண்ட இறுதி சுற்றில் ஹங்கேரி வீராங்கனை 21 வயதான வெரோனிகா மாஜோர் 245.1 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அவருக்கு இது 2-வது தங்கப்பதக்கம் ஆகும். ஏற்கனவே 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் அவர் மகுடம் சூடியிருந்தார்.

ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிரிவிலும் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியது. இதில் இந்திய வீரர் அனிஷ் பான்வாலா தகுதி சுற்றை தாண்டவில்லை. இதே போல் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் காயத்ரி, சுனிதி சவுகான் ஆகிய இந்தியர்கள் தகுதி சுற்றுடன் நடையை கட்டினர்.

மேலும் செய்திகள்