உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி: இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் காயத்தால் விலகல்

உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் காயம் காரணமாக பாதியில் விலகினார்.

Update: 2019-03-16 23:09 GMT
பாகு,

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை போட்டி அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் தனது சாகசத்தை வெளிக்காட்டி அபாரமாக செயல்பட்ட இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் ‘வால்ட்’ பிரிவின் தகுதி சுற்றில் 3-வது இடத்தை பிடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.

இதன் இறுதி சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் தனது முதல் வாய்ப்பில் சரியாக தரையிறங்கவில்லை. இதனால் அவருக்கு முழங்காலில் காயம் அதிகரித்தது. எனவே அவர் தனது 2-வது முயற்சியில் ஈடுபடாமலேயே போட்டியில் இருந்து விலகினார்.

காலில் காயம் அடைந்த மணிப்பூரை சேர்ந்த 25 வயதான தீபா கர்மாகர் அடுத்த வாரம் தோகாவில் நடைபெறும் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இருந்தும் விலகி உள்ளார். 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தீபா கர்மாகர் இந்த போட்டியின் மூலம் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது காயத்தால் அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

காயம் அடைந்த தீபா கர்மாகர் உடனடியாக நாடு திரும்பி சிகிச்சை பெற இருக்கிறார். அத்துடன் மங்கோலியாவில் ஜூன் மாதம் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஜெர்மனியில் அக்டோபர் மாதம் நடக்கும் உலக சாம்பியஷிப் போட்டிக்கு தன்னை தயார்படுத்துவதில் அவர் முனைப்பு காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடத்தை பிடித்து அசத்திய தீபா கர்மாகர் அதன் பிறகு காயத்தில் இருந்து மீண்டு வர சுமார் 2 வருடம் பிடித்தது நினைவிருக்கலாம்.

தீபா கர்மாகர் காயம் குறித்து இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் பெடரேஷன் துணைத்தலைவர் ரியாஸ் பாத் அளித்த பேட்டியில், ‘இறுதிப்போட்டிக்கு முன்பாக தீபா கர்மாகருக்கு முழங்காலில் சில பிரச்சினை ஏற்பட்டு வலி உருவானது. பிசியோதெரபிஸ்ட் சிகிச்சைக்கு பிறகு வலியின் தாக்கம் குறைந்தது. அவர் ‘வால்ட்’ முதல் முயற்சியில் சரியாக தரையில் குதிக்கவில்லை. இதனால் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட வலி அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அடுத்த வாய்ப்பை அவர் முயற்சி செய்யாமலேயே போட்டியில் இருந்து விலக நேர்ந்தது. இந்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தீபா கர்மாகர் சிறப்பாக செயல்பட்டாலே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்