மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

Update: 2018-05-10 21:00 GMT

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான சிமோனா ஹாலெப் (ருமேனியா), 6–ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். இதில் பிளிஸ்கோவா 6–4, 6–3 என்ற நேர் செட்டில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் மாட்ரிட் ஓபனில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஹாலெப்பின் ‘வீறுநடை’ முடிவுக்கு வந்தது. மற்றொரு கால்இறுதியில் கரோலினா கார்சியா (பிரான்ஸ்) 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் கார்லா சுவாரஸ் நவரோவை (ஸ்பெயின்) தோற்கடித்தார்.

ஆண்கள் பிரிவின் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) 6–3, 6–3 என்ற நேர் செட்டில் டேவிட் கோபினை (ஸ்பெயின்) வெளியேற்றினார். இன்னொரு ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ‌ஷபோவலோவ் 6–4, 6–4 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் மிலோஸ் ராவ்னிக்கை வீழ்த்தினார்.

இதன் இரட்டையர் 2–வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் கூட்டணி 6–4, 6–7 (4), 5–10 என்ற செட் கணக்கில் ரவென் கிளாசென் (தென்ஆப்பிரிக்கா)– மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியிடம் போராடி வீழ்ந்தது.

மேலும் செய்திகள்