இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நடால், ஷரபோவா

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரும், 7 முறை சாம்பியனுமான ரபெல் நடால் அரைஇறுதியை எட்டினார்.

Update: 2018-05-18 22:30 GMT
ரோம்,

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரும், 7 முறை சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் போக்னினியை (இத்தாலி) தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார். இந்த பட்டத்தை வென்றால் நடால் மீண்டும் முதலிடத்தை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கால்இறுதியில் மரின் சிலிச் (குரோஷியா) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் காரெனோ பஸ்தாவை (ஸ்பெயின்) தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) விரட்டினார்.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது தரவரிசையில் 40-வது இடம் வகிப்பவருமான ரஷியாவின் மரிய ஷரபோவா, 6-ம் நிலை வீராங்கனையும், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) எதிர்கொண்டார். 3 மணி 13 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் ஷரபோவா 6-7 (6-8), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்டாபென்கோவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் ஷரபோவா டாப்-10 வீராங்கனை ஒருவரை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் செய்திகள்