வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறிய ஆன்டி முர்ரே விலகல்

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கால்இறுதிக்கு முன்னேறிய ஆன்டி முர்ரே விலகினார்.

Update: 2018-08-04 21:30 GMT

வாஷிங்டன்,

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் 3–வது முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), ருமேனியா வீரர் மாரிஸ் கோபில்லை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆன்டி முர்ரே 6–7 (5–7), 6–3, 7–6 (7–4) என்ற செட் கணக்கில் மாரிஸ் கோபில்லை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். உள்ளூர் நேரப்படி முந்தைய நாள் நள்ளிரவில் தொடங்கிய இந்த ஆட்டம் மறுநாள் அதிகாலை காலை 3 மணி வரை நீடித்தது. இதனால் சோர்வடைந்த ஆன்டி முர்ரே போட்டி முடிந்ததும் மைதானத்தில் விழுந்து கண்ணீர் விட்டார். அத்துடன் அவர் வாஷிங்டன் ஓபன் போட்டியில் இருந்தும் விலகினார். 31 வயதான ஆன்டி முர்ரே இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து 11 மாத இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் தான் களம் திரும்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி முடிந்த பிறகு ஆன்டி முர்ரே அளித்த பேட்டியில், ‘கடந்த 4 நாட்களில் அதிக நேரம் விளையாடியதில் நான் சோர்வடைந்து விட்டேன். கடந்த 18 மாதங்களில் கடினமான ஆடுகளங்களில் நான் விளையாடவில்லை. நீண்ட கால காயத்தில் இருந்து திரும்பி இருக்கும் நான் எனது உடல் தகுதியை கவனத்துடன் கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது எனது உடல் தகுதி மிகவும் சிறப்பாக இல்லை என்று உணருகிறேன். போட்டியை அதிகாலை 3 மணிக்கு முடிப்பது வீரர்கள், பார்வையாளர்கள், டெலிவி‌ஷன் ஒளிபரப்பு நிறுவனத்தினர் உள்பட யாருக்கும் நல்லதல்ல. இதுபோன்று போட்டியை முடித்து விட்டு அடுத்த நாள் ஆட்டத்துக்கு புத்துணர்வுடன் திரும்புவது என்பது கடினமான காரியம். போட்டிகளுக்கு இடையே சோர்வில் இருந்து மீண்டு வர போதிய ஓய்வு தேவையானதாகும். சோர்வு காரணமாக இத்துடன் இந்த போட்டியில் இருந்து விலகுகிறேன். டோராண்டோவில் நடைபெறும் ரோஜர்ஸ் கோப்பை போட்டியில் இருந்தும் விலகுகிறேன். அடுத்து சின்சினாட்டி போட்டியில் களம் இறங்க திட்டமிட்டு இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்