சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பெடரர்–ஜோகோவிச்

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

Update: 2018-08-19 21:15 GMT

சின்சினாட்டி, 

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பெல்ஜியத்தின் டேவிட் கோபினை எதிர்கொண்டார். முதல் செட்டை பெடரர் 7–6 (3) என்ற கணக்கில் வென்று 2–வது செட்டில் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போது தோள்பட்டை காயத்தால் கோபின் விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு அரைஇறுதியில் ஜோகோவிச் (செர்பியா) 6–4, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தினார். மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பெடரர்–ஜோகோவிச் மோதுகிறார்கள். இருவரும் இதுவரை 45 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் 23–ல் ஜோகோவிச்சும், 22–ல் பெடரரும் வெற்றி கண்டுள்ளனர்.

இந்த போட்டியில் ஜோகோவிச் வாகை சூடினால், ஆயிரம் தரவரிசை புள்ளிகள் வழங்கும் 9 வகையான மாஸ்டர்ஸ் போட்டியிலும் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற அரிய பெருமையை பெறுவார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6–3, 6–4 என்ற நேர் செட் கணக்கில் அரினா சபலென்காவையும் (பெலாரஸ்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 3–6, 6–4, 6–2 என்ற செட் கணக்கில் கிவிடோவாவையும் (செக்குடியரசு) தோற்கடித்தனர். இறுதி ஆட்டத்தில் ஹாலெப்– பெர்டென்ஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்