அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் விற்பனை..!
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் இன்று மேலும் அதிரடியாக உயர்ந்துள்ளது.;
கோப்புப்படம்
பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர் சூழல்களால், தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 20-ந்தேதி தங்கம் விலை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66,480 என்ற நிலையை அடைந்தது.
அதன் பின்னர், கடந்த 21-ந்தேதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று முன்தினம் அதிகரித்தது. நேற்றும் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.