கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்: மனைவியை கொன்ற கணவர் கைது

பலமுறை எச்சரித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை கடப்பாரையால் அடித்து கொலை செய்த கணவர் கைதுசெய்யப்பட்டார்.

Update: 2018-09-05 21:45 GMT

கல்லல்,

கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிரே வசித்து வருபவர் செல்வராஜ்(வயது 47). வெளிநாட்டில் வேலை செய்து வந்த செல்வராஜ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். அதன்பிறகு அவர் வெளிநாடு செல்லவில்லை. தற்போது ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி சரசுவதி என்ற ஜானகி(35). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

சரசுவதிக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த செல்வராஜ், தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை விடவில்லை. இதுதொடர்பாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏறபட்டு வந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, ஜானகி எச்சரிக்கப்பட்டார். இருப்பினும் அவர் தனது கள்ளத்தொடர்பை விடவில்லை.

இந்தநிலையில் நேற்று மதியம் செல்வராஜிக்கும், மனைவி ஜானகிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செல்வராஜ், கடப்பாரையால் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சரசுவதி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

இந்த சம்பவம் குறித்து கல்லல் போலீசார் ஜானகி உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்து செல்வராஜை கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்