காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
மகாத்மா காந்தியின் பாதையை தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "காந்தி ஜெயந்தி என்பது மனித வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த அன்பான காந்தியின் அசாதாரண வாழ்க்கைக்கு அஞ்சலி செலுத்துவதாகும். துணிச்சலும், எளிமையும் எவ்வாறு பெரிய மாற்றத்திற்கான கருவிகளாக மாறும் என்பதை அவர் நிரூபித்தார்.
மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அத்தியாவசிய வழிமுறையாக சேவை மற்றும் இரக்கத்தின் சக்தியை அவர் நம்பினார். ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேடலில் அவரது பாதையை நாம் தொடர்ந்து பின்பற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.