சிதம்பரம்: மீனுக்கு விரித்த வலையில் முதலைக்குட்டி சிக்கியதால் பரபரப்பு
சுமார் 5 அடி நீளம், 30 கிலோ எடை கொண்ட முதலைக்குட்டி மீனவர்களின் வலையில் சிக்கியது.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கே.ஆடுர் கிராமத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் சிலர் வலை விரித்திருந்தனர். ஆனால் அந்த வலையில் மீனுக்கு பதிலாக முதலைக்குட்டி ஒன்று சிக்கியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அந்த முதலைக்குட்டியை வலையுடன் சேர்த்து லாவகமாக கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 5 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட அந்த முதலைக்குட்டியை பாதுகாப்பாக கட்டி வனத்துறையிடம் மக்கள் ஒப்படைத்தனர். மேலும் அந்த குளத்தில் ராட்சத முதலை இருப்பதாகவும், அதனை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.