திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

தசரா திருவிழாவிற்காக வந்திருந்த பக்தர்கள் பலரும், சூரசம்ஹாரம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வரத்தொடங்கினர்.;

Update:2025-10-03 20:59 IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலம், விடுமுறை நாட்கள், சுபமுகூர்த்த தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது தொடர் விடுமுறையால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருகின்றனர்.

இன்று அதிகாலை முதலே கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதனால் கடற்கரையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புனித நீராடிய பிறகு பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்காக வந்திருந்த பக்தர்கள் பலரும், சூரசம்ஹாரம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரத்தொடங்கினர்.

இதனால் கோவில் வளாகத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வாகனங்களில் வந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நின்று ஊர்ந்தபடியே சென்றதை பார்க்க முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்