மதுரையில் இந்து-இஸ்லாமியர்கள் அண்ணன்-தம்பிகளாக வாழ்கிறோம்: செல்லூர் ராஜு
மதுரையில் இந்து-இஸ்லாமியர்கள் அண்ணன்-தம்பிகளாக வாழ்கிறோம் என்று செல்லூர் ராஜு கூறினார்.;
மதுரை,
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கோட்டையன் கட்சி மாறியது அ.தி.மு.க. எனும் ஆலமரத்தில் ஒரு இலை உதிர்வது போல தான். பழுத்த இலை ஒன்று கீழே விழுவதால் ஆலமரம் சாய்ந்து விட்டது என அர்த்தமில்லை. செங்கோட்டையனுக்கு மக்கள் ஓட்டு போடவில்லை, இரட்டை இலைக்காக, அ.தி.மு.க.வுக்காகதான் மக்கள் ஓட்டு போட்டார்கள்.
தமிழக அரசியலில் புதிதாக யார் வந்தாலும் இப்போது மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல்தான் நானும் முதல்-அமைச்சர் ஆவேன் என நடிகர் விஜய் பேசி வருகிறார்.
மதுரையில் இந்து-இஸ்லாமியர்கள் அண்ணன்-தம்பிகளாக வாழ்கிறோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா சென்று சந்தித்தது மனிதாபிமான அடிப்படையில் தான். நட்பின் அடிப்படையில்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தோம். இதில் அரசியல் இல்லை.
நாங்கள் என்ன பா.ஜனதாவுடன் சேர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரத்துக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தோமா? இல்லையே. கூட்டணி என்பது தோளில் போடப்பட்ட துண்டு. கூட்டணியில் இருந்தாலும் கொள்கை தனித்தனியாக இருக்கும். தேர்தலில் பார்ட்னராக இருப்போம். எந்த நிலைமை வந்தாலும் நான் அ.தி.மு.க வேட்டியை மாற்ற மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.