ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.;

Update:2024-12-27 12:28 IST

 

ஜெருசலேம்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியிருந்தது.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த குழுக்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மத்திய இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதல் நடத்தினர்.

இந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. ஆனால், இந்த ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்