தினத்தந்தி
முருங்கைக்காயை கூட்டு, சாம்பாரில் போட்டு செய்து இருப்பீங்க. இன்று முருங்கைக்காயை வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : உதிராக வடித்த சாதம் - 2 கப், முருங்கைக்காய் - 1, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு, அலங்கரிக்க கொத்தமல்லித்தழை - தேவைக்கு.
பொடிக்கு அரைக்க. தேங்காய்த்துருவல் - 1/2 கப், தனியா - 1 டீஸ்பூன், தக்காளி - 1, வெங்காயம் - தலா 1, புளி - சுண்டைக்காய் அளவு.
தாளிக்க..கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலைகள், பச்சைமிளகாய் - 1.
செய்முறை : தக்காளி, முருங்கைக்காய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொடிக்கு கொடுத்ததை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் தக்காளி, வெங்காயத்தை தண்ணீர் வற்றும்வரை வதக்கி ஆறவைத்து, புளியுடன் சேர்த்து மிக்சியில் கெட்டியான விழுதாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்த பின் முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும்.
முருங்கைக்காய் பாதியளவு வெந்தவுடன் அரைத்த பொடி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
முருங்கைக்காய் நன்றாக வெந்ததும் சாதம் போட்டு கிளறி அடுப்பை நிறுத்தவும். கடைசியாக கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.