தினத்தந்தி
சைவ உணவுப் பிரியர்களின் விருப்பப்பட்டியலில் எப்போதும் இடம்பிடிக்கும் உணவுதான் காளான். அதில் செட்டிநாட்டு மசாலாவின் மணமும் காரமும் சேர்ந்தால், அந்த சுவை இன்னும் அசத்தலாக இருக்கும். வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : இந்தக் குழம்பு தயாரிக்க 300 கிராம் காளான், 2 வெங்காயம், 2 தக்காளி, ¼ டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் தனியா, ¾ டீஸ்பூன் சீரகம், ½ டீஸ்பூன் சோம்பு, 2 அங்குல பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய், 5 காய்ந்த மிளகாய், கால் மூடி தேங்காய், எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தேவை.
செய்முறை : முதலில் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக வறுக்கவும்.
அதன்பின் வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். பிறகு தக்காளியை சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் துருவிய தேங்காயை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும். கலவை முழுவதும் ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
காளானை நன்றாக கழுவி, ஈரமில்லாமல் துடைத்து, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இப்போது அரைத்த மசாலா விழுதை சேர்த்து, அதனுடன் மஞ்சள்தூள், தேவையான உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடுங்கள்.
குழம்பு கொதிக்கத் தொடங்கியதும் அதில் நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் வேகவிடுங்கள். காளான் நன்றாக வெந்து, குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலே பிரிய ஆரம்பித்ததும் அடுப்பு தீயை குறைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கினால், மணமார்ந்த செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு தயார். இந்தக் குழம்பு சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா ஆகிய அனைத்திற்கும் அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.