வீட்டிலேயே எளிய முறையில் குல்பி செய்வது எப்படி?

தினத்தந்தி

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குல்ஃபியை கடைகளில் வாங்காமல், வீட்டிலேயே சுத்தமாகவும் எளிமையாகவும் செய்து கொடுக்கலாம். பால், பருப்பு வகைகள் மற்றும் சில பொருட்களை வைத்து சுவையான குல்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: பால் - 1 லிட்டர் (Full Cream Milk), சர்க்கரை - 50 கிராம், கஸ்டர்டு பவுடர் அல்லது கார்ன்ஃப்ளோர் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், முந்திரி மற்றும் பாதாம் - 100 கிராம், குங்குமப்பூ அல்லது பாதாம் எசன்ஸ் - 5 துளிகள், பனைவெல்லம் அல்லது வெல்லம் - எலுமிச்சை அளவு.

செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் காய்ச்சவும். பால் சுமார் 600 மில்லியாக குறையும் வரை அடிபிடிக்காமல் அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும்.

பின்னர் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரையும் வரை சுமார் 3 நிமிடங்கள் காய்ச்சவும். தொடர்ந்து பனைவெல்லம் அல்லது வெல்லத்தை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் கிளறவும்.

கஸ்டர்டு பவுடரை கால் கப் குளிர்ந்த தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். இதனை கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சிறிது சிறிதாக ஊற்றியபடி, தொடர்ந்து 3 நிமிடங்கள் கை விடாமல் கிளறவும்.

அடுப்பை அணைத்த பிறகு ஏலக்காய்த்தூள் மற்றும் குங்குமப்பூ அல்லது பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை முழுமையாக ஆறியதும் ஃப்ரீசரில் வைத்து உறையவிடவும்.

கலவை நன்றாக உறைந்ததும் வெளியில் எடுத்து சுமார் அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் மிக்சி ஜாரில் போட்டு 1 முதல் 2 நிமிடங்கள் இடைவெளிவிட்டு நன்றாக அரைத்து மென்மையான கலவையாக மாற்றவும்.

பாதாம் மற்றும் முந்திரியை தனியாக மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனை குல்பி கலவையில் சேர்த்து நன்றாக கலந்து குல்பி கப்புகளில் ஊற்றவும்.

கப்புகளை இரவு முழுவதும் ப்ரீசரில் வைத்து மறுநாள் எடுத்தால், சுவையானதும் கிரீமியானதுமான வீட்டுக் குல்பி தயார்.

மாலை நேர டிபன்: சுவையான சேமியா புலாவ்!