போதை மருந்தை வினியோகிக்கும் வில்லனும், அவரை பிடிக்க முயற்சிக்கும் நாயகனும் - மாபியா


போதை மருந்தை வினியோகிக்கும் வில்லனும், அவரை பிடிக்க முயற்சிக்கும் நாயகனும் - மாபியா
x
தினத்தந்தி 23 Feb 2020 12:45 AM GMT (Updated: 23 Feb 2020 12:45 AM GMT)

போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரி அருண் விஜய்யின் தம்பியே போதை மருந்துக்கு அடிமையாகி, காணாமல் போகிறார் - படம் மாபியா விமர்சனம்.

கதையின் கரு:  நகரில், இளைஞர்கள் மத்தியில் போதை மருந்து பழக்கம் அதிகமாகி வருகிறது. அதன் தடுப்பு பிரிவு அதிகாரி அருண் விஜய்யின் தம்பியே போதை மருந்துக்கு அடிமையாகி, காணாமல் போகிறார். அதனால், போதை மருந்தை வினியோகிக்கும் ஆசாமி யார்? என்ற தேடுதல் வேட்டையை அருண் விஜய் தீவிரப்படுத்துகிறார். இந்த வேட்டையில், ஒரு லாரி நிறைய போதை மருந்து பிடிபடுகிறது.

இதைத்தொடர்ந்து போதை மருந்து தடுப்பு பிரிவின் உயர் அதிகாரி அருண் டி.சங்கர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார். அந்த அதிர்ச்சியும், சோகமும் மறைவதற்குள் சமூக சேவகர் ‘தலைவாசல்’ விஜய் கொலை செய்யப்படுகிறார். அருண் விஜய் ‘டீம்’ தங்களின் வேட்டையை தீவிரப்படுத்துகிறது. போதை மருந்து கும்பலின் தலைவன் பிரசன்னா என்ற ரகசியத்தை அருண் விஜய் கண்டுபிடிக்கிறார்.

அதற்குள், அவருடைய அம்மா, அப்பா, தங்கை மூன்று பேரையும் பிரசன்னா கடத்தி விடுகிறார். “நீ பிடித்து வைத்திருக்கும் போதை மருந்தை என்னிடம் ஒப்படைத்து விட்டு, உன் குடும்பத்தினரை அழைத்து செல்” என்று மிரட்டுகிறார். அவருடைய மிரட்டலுக்கு அருண் விஜய் பணிந்தாரா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

அருண் விஜய் தன்னை மாறுபடுத்தி காட்டுவதற்காக சிகை அலங்காரத்தை மாற்றி இருக்கிறார். அணுகுமுறை, பழக்கவழக்கம் ஆகியவற்றில் ஒரு அதிகாரிக்கே உரிய கம்பீரம் காட்டுகிறார். அவருடைய தேடுதல் வேட்டைகளும், சண்டை காட்சிகளும் சிலிர்க்க வைக்கின்றன.

பிரசன்னாவுக்கு வில்லன் வேடம், புதுசு அல்ல. பணக்கார தோற்றத்தில், அவர் கச்சிதம். சிரித்துக்கொண்டே வில்லத்தனம் செய்வது, பயமுறுத்துகிறது. அழகான கதாநாயகி பிரியா பவானி சங்கருக்கு காக்கி உடையை அணிவித்து, கவுரவப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜேக்ஸ் பிஜாய்யின் இசையில், பாடல்கள் எடுபடவில்லை. கோகுல் பினோய் ஒளிப்பதிவில், நாடக வாசனை. கார்த்திக் நரேன் டைரக்டு செய்து இருக்கிறார். போதை மருந்து வியாபாரம், அதற்கு இடையூறாக இருக்கும் கதாநாயகனின் குடும்பத்தை கடத்துவது என விறுவிறுப்பாக கதை சொல்ல முயன்று இருக்கிறார். கதை சம்பவங்களிலும், காட்சிகளிலும் புதுசாக எதுவும் இல்லை என்பதால் வேகம் தடைபடுகிறது. ‘கிளைமாக்ஸ்’சில் அந்த சஸ்பென்ஸ், எதிர்பாராத அதிர்ச்சி.

Next Story