திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

சங்காபிஷேக வழிபாட்டின்போது திருமுறைகள் மற்றும் வேதபராயணம் ஓதப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவில் காசிக்கு இணையான 6 கோவில்களில் முதன்மையான கோவிலாக விளங்குகிறது. இங்கு உள்ள முக்குளத்தில் நீராடி சுவாமியை வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் கார்த்திகை மாத 4-வது சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷகம் நடைபெற்றது. இதற்காக புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகள் நெல்லின் மீது வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடு மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அர்ச்சகர் ராஜப்பா சிவாச்சாரியார் தலைமையில் சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதிலிருந்த புனித நீரால் மூலவர் சுவேதாரண்யேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சிறப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டின்போது திருமுறைகள் மற்றும் வேதபாராயணம் ஓதப்பட்டது.
சங்காபிஷேக நிகழ்வில் கோவில் அறங்காவலர் தாண்டவ மூர்த்தி, நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.






