மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் ஒரே நாளில் 3.6 கோடி பேர் புனித நீராடல்

Image Courtesy : AFP
திரிவேணி சங்கமத்தில் இன்று ஒரே நாளில் 3.6 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், வார விடுமுறையையொட்டி இன்றைய தினம் மகா கும்பமேளாவிற்கு அதிக அளவிலான மக்கள் வருகை தந்தனர். இன்று ஒரே நாளில் திரிவேணி சங்கமத்தில் 3.6 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இதுவரை திரிவேணி சங்கமத்தில் மொத்தம் 33 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.