கேளிக்கை விடுதி தீ விபத்தில் 14 பேர் பலி: நீதி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு

மும்பை கேளிக்கை விடுதி தீ விபத்து குறித்து விசாரிக்க நீதி விசாரணை குழு அமைத்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கேளிக்கை விடுதி தீ விபத்தில் 14 பேர் பலி: நீதி விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மும்பை,

மும்பை கேளிக்கை விடுதி தீ விபத்து குறித்து விசாரிக்க நீதி விசாரணை குழு அமைத்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தீ விபத்து

மும்பை கமலா மில் வளாகத்தில் இருந்த கேளிக்கை விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய இளம்பெண் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்தவேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் போர்டே மற்றும் காட்கர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் அனில் சக்ரே, கேளிக்கை விடுதி தீவிபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த 12 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நீதி விசாரணைக்கு அவசியம் இல்லை என்று கூறியிருந்தார்.

விசாரணை குழு

இந்த வழக்கு நேற்று மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

கேளிக்கை விடுதி தீவிபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டனர். தீ விபத்தில் உண்மை நிலவரத்தை அறியவும், விதிமுறை மீறல்கள் குறித்தும் இந்த குழு விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணை குழு விரைவில் தனது விசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com