தஞ்சையில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு தொடங்கியது முதல்நாளில் 1500 பேர் பங்கேற்பு

தஞ்சையில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு தொடங்கியது. முதல் நாளில் 1,500 பேர் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு தொடங்கியது முதல்நாளில் 1500 பேர் பங்கேற்பு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு ஆகஸ்டு 2-ந்தேதி தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

இதில் சேருவதற்காக கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் ஜூலை 17-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்திருந்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, காரைக்கால் ஆகிய 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று முதல்நாளில் திருநெல்வேலி மற்றும் அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இதில் 18 வயது முதல் 21 வயது வரையிலான 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக்காக நேற்று முன்தினம் இரவு முதலே இளைஞர்கள் வந்து குவியத்தொடங்கினர். சோல்ஜர், சோல்ஜர்டெக்னிக்கல், சோல்ஜர் டிரேடுமேன் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது.

முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஓட்டப்போட்டி நடைபெற்றது. ஓட்டத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடந்தவர்கள் மட்டும் அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மார்பளவு, எடை, உயரம் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

மேலும் தேர்வுக்கு வந்திருப்பவர்கள் சரியான நபர்களா? என்பதை உறுதி செய்ய அவர்களின் பெருவிரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. இந்த தேர்வு திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு மைய இயக்குனர் ராஜாலால் தலைமையில் நடந்து வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த கட்டமாக திருச்சியில் நடைபெறும் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com