

வேடசந்தூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.பி.ஐ. காலனியை சேர்ந்தவர் ஆதர்ஷா (வயது 55). இவர், தனது உறவினர்களான தீபா (50), பிரபதா (35) ஆகியோருடன் நேற்று காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்த காரை ஆதர்ஷா ஓட்டினார்.
வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கார் வந்தபோது, முன்னால் வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி பழைய இரும்பு பொருட்கள் ஏற்றிச்சென்ற மினி வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கியது. மேலும் மினிவேனில் இருந்த இரும்பு பொருட்கள் சரிந்து விழுந்தன.
இந்த விபத்தில் காரில் வந்த தீபா, பிரபதா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ஆதர்ஷா லேசான காயத்துடன் உயிர்தப்பினார். பின்னர் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேடசந்தூர் அருகே குன்னம்பட்டியை சேர்ந்த மினி வேன் டிரைவர் கோபிகண்ணனை (24) கைது செய்தனர்.