

படாதபாடு படுத்தும் பல்வலியைப் போலவே, ஒற்றைத் தலைவலியும் நம்மை பாடாய்ப்படுத்தும். ஒருமுறை தலைவலி வந்தால் இரண்டு மூன்று நாட்களுக்கு அதன் வேதனையை அனுபவிக்க வேண்டி வரும். அதுமட்டுமல்லாமல் மாதத்தில் பல முறை மீண்டும் மீண்டும் தலைவலி வந்து வேதனை தரும். எவ்வளவோ மருத்துவ வளர்ச்சி இருந்தாலும் ஒற்றைத் தலைவலியை முற்றிலும் தீர்க்க வழி கண்டுபிடிக்கப்படவில்லை. அது எப்போது தாக்கும் என்றும் கணிக்க முடியாது.
தற்போது இதை அறிந்து கொள்ளவும், உடனடியாக நிவாரணத்தை தொடங்கவும் ஒரு கைப்பட்டை வந்திருக்கிறது. இஸ்ரேலைச் சேர்ந்த தெரானிகா லிமிடெட் நிறுவனம் இந்த பட்டையை தயாரித்து வெளியிட்டு உள்ளது. எந்தப் பக்கம் தலைவலி ஏற்படுமோ அந்தப்பக்கம் கையின் மேல் பகுதியில் இந்த கைப்பட்டையை அணிந்து கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இதில் இருக்கும் மின்முனைகள் சருமத்தை தொடுவதன் மூலம் நரம்புகளுடன் தொடர்பில் இருக்கும். ஒருவேளை ஒற்றைத் தலைவலி தாக்கினால் இது மூளையின் குறிப்பிட்ட செல்களை தூண்டிவிட்டு இயற்கையாக வலியின் தன்மையை குறைக்க துணை செய்யும். இதனுடைய அப்ளிகேசனை மருத்துவர் அல்லது உதவியாளரின் ஸ்மார்ட்போனில் நிறுவிக் கொண்டால் இருக்கும் இடத்தில் இருந்தே பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.