விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை

விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நடைபெற்றது.
விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை
Published on

விழுப்புரம்,

சிவனின் பிரம்மகத்தி தோஷத்தை போக்க அம்மன் மயானக்கொள்ளை நடத்தி வெற்றி பெற்றதே மயானக்கொள்ளை திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

விழுப்புரம் பூந்தோட்டம் மேல்வன்னியர் தெரு சின்னப்பா லேஅவுட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் 21ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழா கடந்த 17ந் தேதி கொடியேற்று விழா, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் மகா ஹோமம், 8 மணிக்கு மேல்வன்னியர் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் நடைபெற்று 9 மணியளவில் அங்காளம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் 5 மணியளவில் அங்குள்ள மயானத்தில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழுப்புரம் பூந்தோட்டம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் விநாயகர், வீரபத்திரர், அம்மன் வீதியுலா நடந்தது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சேகர், ஆனந்தன், காசிநாதன், பழனி, சந்திரசேகர குருக்கள் மற்றும் பூந்தோட்டம் பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com